உச்ச நீதிமன்றம் யாருக்கு?

Published On:

| By Minnambalam

bigil bano

எஸ்.வி.ராஜதுரை

2002இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களின்போது ஐந்து மாதக் கர்ப்பிணியான பில்கிஸ் பானு (அவருக்கு அப்போது வயது 21) என்ற பெண்மணியைக் கூட்டு வன்புணர்ச்சி செய்து அவருடைய மூன்று வயதுக் குழந்தையின் தலையைத் தரையில் அடித்துக் கொன்று,

அவரையும் அவருடைய தாயார் உட்பட அக்குடும்பப் பெண்கள் அனைவரையும் கூட்டு வன்புணர்ச்சி செய்து, குடும்ப உறுப்பினர்கள் பலரைப் படுகொலை செய்த குற்றங்களுக்காக  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பதினோரு பேரை,

அவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்திருந்த நிலையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை இந்திய சுதந்திரத்தின் பவளவிழா நாளன்று – அதாவது டெல்லி செங்கோட்டையில்  பிரதமர் மோடி மூவண்ணக் கொடியை ஏற்றி,

பெண்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை , இழிவை ஒழிக்க வேண்டும் என்று கர்ஜித்த அதே நாளில் – குஜராத் மாநில அரசாங்கம் ஏற்றுக்கொண்டதை முந்திய கட்டுரையொன்றில் ”மோடி கூறும் ‘பெண் விடுதலை’யும் கொடுங்குற்றவாளிகளும்” குறிப்பிட்டிருந்தோம்.

(அந்தக் கட்டுரையில் குற்றவாளிகளின் கொலைபாதகங்கள் சிலவற்றை நாம் குறிப்பிட மறந்துவிட்டோம்.)  அந்தப் பரிந்துரையின் பேரில் உடனடியாக விடுதலை செய்யப்பட்ட அவர்களுக்கு மாலை மரியாதை செய்தும் இனிப்புகள் வழங்கியும் சங் பரிவாரத்தினர் கொண்டாடினர்.

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது,  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் இந்து மகா சபா அமைப்பினரும் பல இடங்களில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியதை இது நினைவூட்டுகிறது.

அதன் காரணமாகத்தான் இப்போது சனாதன சங்கிகளால் கொண்டாடப்படும் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்யும் ஆணையைப் பிறப்பித்தார்.

இந்தியக் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு  432 இன்படி சிறைத் தண்டனை பெற்றவர்களை  தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்ய மாநில அரசாங்கத்துக்கு உரிமை உண்டு என்றாலும் அதற்கான சில விதிமுறைகள் உள்ளன.

to whom does supreme court belongs to

அவற்றைப் பார்க்கும் முன், இந்த பதினோரு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய மேனாள் மும்பை  உயர் நீதிமன்ற நீதிபதி நீதிநாயகம் ஜே.டி.சால்வி , குஜராத் அரசாங்கத்தின் நடவடிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும் மிக மோசமான பிண்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது என்றும் பெண்களை அதிகாரமுள்ளவர்களாக ஆக்க வேண்டும் என்று பிரதமர் மோடி  பெண்களின் அவலநிலை பற்றிப் பேசிய அதே நாளில்,

பிரதமர்  எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரோ அதே மாநிலத்தின்  அரசாங்கம் அந்தப் பதினோரு கொடியவர்களை விடுதலை செய்ய  முடிவெடுத்தது ஓரு வரலாற்று விநோதம் என்றும், கூட்டு வன்புணர்ச்சிக் குற்றத்தைச் செய்ததற்காக சிறைத் தண்டனை அனுபவிக்கும் வேறு பல கைதிகள் இதேபோன்ற நிவாரணத்தைக் கோரும் அபாயம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

2008ஆம் ஆண்டு அந்தப் பதினோரு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த அவர், போதுமான சாட்சியங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருந்த வேறு எழுவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

to whom does supreme court belongs to
விஜயா தஹில்ரமணி, மிருதுளா பட்கர்

ஆனால் பில்கிஸ் பானு வழக்கில் நியாயம் கிடைப்பதற்காகப் போராடிய வழக்குரைஞர்கள் செய்த மேல் முறையீட்டை விசாரித்த  நீதிநாயகங்கள் விஜயா தஹில்ரமணி, மிருதுளா பட்கர் ஆகியோர் அடங்கிய மும்பை உயர் நீதிமன்ற ஆயம் (Bench)  அந்தப் பதினோரு பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், நீதிநாயகம் ஜே.டி.சால்வியால் விடுதலை செய்யப்பட்ட மற்ற எழுவரும் குற்றவாளிகள்தான் எனத் தீர்ப்பளித்து அவர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கியது.

தண்டனைக்காலம் முடிவதற்குள் விடுதலை செய்யப்பட்ட பதினோரு பேரும் பிராமணர்கள் என்றும்  சர்வோத்தமர்கள் என்றும் சிறையில் அவர்கள் நன்னடத்தையைக் கடைப்பிடித்தனர் என்றும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று  பரிந்துரைத்த வாரியக் குழுவில் உறுப்பினராக இருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதன் மூலம்,

இந்தியாவில் மனுதர்ம சாஸ்திரத்தால் உயர்த்திப் பிடிக்கப்படும் வர்ணாஸ்ரம தர்மம்தான் இந்தியச் சட்டங்கள் அனைத்தையும் விட உயர்வானது என்ற கருத்தை மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.

to whom does supreme court belongs to

 சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்கு, தண்டனைக் காலம் முடிவதற்குமுன் விடுதலை செய்வது அல்லது தண்டனைக் குறைப்பு செய்வது பற்றி 1992ஆம் ஆண்டு குஜராத் மாநில அரசாங்கம் வகுத்த கொள்கையின்படிதான் அந்தப் பதினோரு பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும்  தண்டனைக் குறைப்பு தொடர்பாக 2014ஆம் ஆண்டில் அந்த மாநில அரசாங்கம்  வகுத்த கொள்கை பின்பற்றப்பட்டிருந்தால் அவர்களை விடுதலை செய்திருக்க முடியாது என்றும் ’டி  ஒயர்’  மின்னேட்டில் வெளிவந்த கட்டுரையில் கூறுகிறது.

மேலும்,  தண்டனைக் குறைப்பு செய்தல் தொடர்பாக –  குறிப்பாக வன்புணர்ச்சி செய்தவர்களின் தண்டனைக் குறைப்பு  தொடர்பாக –  அண்மையில் ஒன்றிய அரசாங்கம் வகுத்துள்ள வழிகாட்டுநெறிகளை, குஜராத் அரசாங்கம்  பின்பற்றாமல் அலட்சியம் செய்ததாலேயே, கூட்டு வன்புணர்ச்சிக் குற்றம் செய்த அந்தப் பதினோரு பேரை  குஜராத் அரசாங்கத்தால் விடுதலை செய்ய முடிந்திருக்கிறது என்றும் அக்கட்டுரை சொல்கிறது.

மூத்த வழக்குரைஞரும்  குற்றவியல் சட்ட வல்லுநருமான ரெபெக்கா எ.ஜான், நாம் முந்தைய கட்டுரையில் கூறிய கருத்தை, அதாவது அந்தப் பதினோரு பேரை விடுதலை செய்வதற்கு உச்ச நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியிருந்தது என்ற கருத்தை உறுதி செய்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432 (7)இன் படி, ஒரு குற்ற விசாரணை எந்த மாநிலத்தில் நடைபெற்றதோ, எந்த மாநில நீதிமன்றத்தில் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அந்த மாநில அரசாங்கத்துக்குத்தான்  தண்டனைக்  குறைப்பு கோரும் மனுக்களைப் பரிசீலிக்கும் அதிகார வரம்பு உள்ளதாக உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஸ்ரீஹரன் என்ற முருகன் எதிர் ஒன்றிய அரசாங்கம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயமும்கூட (Constitutional Bench) கூட இதையே உறுதி செய்துள்ளது.

 பில்கிஸ் பானுவின் வழக்கு விசாரணை  உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள அமர்வு நீதிமன்றத்தால் மேற்சொன்ன குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டதால்,  தண்டனைக் குறைப்பைப் பரிசீலிப்பதற்கான ‘பொருத்தமான அரசாங்கம்’ (Appropriate Government) மகாராஷ்டிர அரசாங்கம் தானேயன்றி, குஜராத் அரசாங்கம் அல்ல.

‘பொருத்தமான அரசாங்கம்’ என்பது என்ன என்பதை மேற்சொன்ன சட்டப் பிரிவு 432(7) தெளிவுபடுத்துகிறது : ‘குற்றம் இழைத்தவர் எந்த மாநிலத்தில் விசாரணை செய்யப்பட்டாரோ, எந்த மாநிலத்தில் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ அந்த மாநில அரசாங்கம்தான் பொருத்தமான அரசாங்கம்’ என்று கூறுகிறது.

ஆனால்,  கடந்த  (2022) மே மாதம் அந்தப் பதினோரு பேரில் ஒருவர் தண்டனைக் குறைப்பு கேட்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்வதற்கு அனுமதித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய ஆயம், பகவான்தாஸ் ஷா என்ற லாலா வக்கீல் எதிர் குஜராத் அரசாங்கம் என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மட்டும் மேற்கோள் காட்டி, மேற்சொன்ன பதினோரு பேர் செய்த குற்றங்கள் குஜராத் மாநிலத்தில்தான் நடைபெற்றன என்பதால், தண்டனைக் குறைப்பைப் பரிசீலிக்கும் அதிகார வரம்பு குஜராத் மாநில அரசாங்கத்துக்குத்தான் உள்ளது என்று  தீர்ப்புக் கூறியது.

அதற்குமுன் , மேற்சொன்ன  முருகன்  எதிர் ஒன்றிய அரசாங்கம் வழக்கில் உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் கூறிய தீர்ப்பை ஆதாரமாகக் கொண்டு குஜராத் உயர் நீதிமன்றம் மேற்சொன்ன நபர் அங்கு தாக்கல் செய்திருந்த தண்டனைக் குறைப்பு மனுவின் மீது விசாரணை நடத்தி தண்டனைக் குறைப்பு செய்யும் அதிகார வரம்பு  மகாராஷ்டிர அரசாங்கத்துக்குத்தான் உள்ளது என்று தீர்ப்புக் கூறியிருந்தது.  

to whom does supreme court belongs to
விக்ரம் நாத் , அஜய் ரஸ்டோகி

குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நேர்மாறான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜாய் ரஸ்டோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய ஆயம்,

பில்கிஸ் பானுவுக்காக வழக்காடிய வழக்குரைஞர்களின் வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும், அதற்குக் காரணம் குற்றங்கள் குஜராத் மாநிலத்தில்தான் நடைபெற்றன என்றும், சாதாரணமாக குற்றம் எந்த மாநிலத்தில் புரியப்படுகிறதோ அந்த மாநிலத்தில்தான் விசாரணை நடப்பது வழக்கம் என்றும், எனவே பொதுவாக தண்டனைக் குறைப்பு செய்யக்கூடிய ‘பொருத்தமான அரசாங்கம்’ என்று பார்த்தால், அது குஜராத் அரசாங்கமாகத்தான் இருக்க முடியும் என்றும்,

ஆனால் அசாதாரணமான சூழ்நிலைமைகளின் காரணமாகத்தான்  பில்கிஸ் பானு வழக்கு என்பது விசாரணை, தீர்ப்பு என்ற வரம்புக்குட்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் 6.8.2004ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணையின் பேரில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு மாற்றப்பட்டது என்றும், எனவே, விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, தண்டனைக் குறைப்புக்கான அதிகார வரம்புக்கான ‘பொருத்தமான அரசாங்கம்’ என்று மேற்சொன்ன குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 437 (7) இன் படி சொல்லப்படக்கூடியது  குஜராத் அரசாங்கம்தான் என்று தீர்ப்புக் கூறியது.

 உச்ச நீதிமன்றத்தின் மேற்சொன்ன ஆயம் சட்டத்துக்குத் தவறான விளக்கம் கொடுத்துள்ளது என்று கூறும் ரெபெக்கா, முருகன் எதிர் ஒன்றிய அரசாங்கம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயத்தில் நீதிநாயகம் லலித் பெரும்பான்மையான நீதிபதிகளின்  கருத்துகள் சிலவற்றுடன் உடன்படாமல் இருந்தபோதிலும் அந்த ஆயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டவர்.

அவர் எழுதிய மாறுபட்ட தீர்ப்பின் 23ஆம் பத்தியில் கூறப்பட்டுள்ளதை ரெபக்கா சுட்டிக்காட்டுகிறார்: ‘அ’ என்ற மாநிலத்தில் ஒரு குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்றாலும்,  அந்த குற்றம் தொடர்பான வழக்கு ‘ஆ’ என்ற மாநிலத்தில் நடத்தப்பட்டு அங்கு தண்டனையும் வழங்கப்பட்டால், ’ஆ’ என்ற மாநிலம்தான் ‘பொருத்தமான அரசாங்கம்’ என்று கொள்ள வேண்டும் .

மேலும், இதே கருத்து முன்பு பல வழக்குகளில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறும் ரெபெக்கா , அவற்றுக்கு எடுத்துக்காட்டாக  மத்தியப் பிரதேசம் எதிர்  ரத்தன் சிங் (1976) 3 SCC 470, ஹனுமந்த் சிங் தாஸ் எதிர் வினய் குமார் மற்றும் பிறர் (1982) 2 SCC 177 ஆகிய வழக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

நேற்று ஓர் உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும்போது பதினோரு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தை சிலர் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

அவர்களில் ஒருவர் கூறினார்:  ”அறிஞர் அண்ணா திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படமொன்றில் ’சட்டம் ஓர் இருட்டறை; வக்கீலின் வாதம் ஓர் ஒளிவிளக்கு’ என்ற வசனம் வருகிறது.

கடந்த பத்தாண்டுக் காலமாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள  தீர்ப்புகள் சிலவற்றைப் படிக்கும்போது அறிஞர் அண்ணாவின் வசனத்தை ‘உச்சநீதிமன்றம்  ஓர் இருட்டறை; அங்கு ஓர் ஒளிவிளக்கு தேவைப்படுகிறது’ என்று மாற்றினால் என்ன?”

கட்டுரையாளர் குறிப்பு:

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

‘சக்ஸ்’ என்னும் மாமனிதர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share