“காக்கிச் சட்டை கனவுல இருக்கேன்… ஆனா கட்-ஆஃப் எவ்வளவு வரும்னு தெரியாம ஒரே பதட்டமா இருக்கு” என்று புலம்பும் எஸ்.ஐ தேர்வர்களே… ரிலாக்ஸ்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அறிவித்துள்ள 1,299 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு நெருங்கிவிட்ட நிலையில், “எவ்வளவு மார்க் எடுத்தா நாம சேஃப்?” என்ற கேள்விக்கான விடை இதோ.
இந்த ஆண்டு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், கட்-ஆஃப் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் நிலவரம் என்ன?
மொத்தமுள்ள 1,299 பணியிடங்களில்,
- தாலுகா (Taluk) எஸ்.ஐ: 800+ இடங்கள் (இதுதான் இருப்பதிலேயே அதிகம்).
- ஆயுதப்படை (AR): 300+ இடங்கள்.
- தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (TSP): 100+ இடங்கள் உள்ளன.
கட்-ஆஃப் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
எழுத்துத் தேர்வு மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்தான் உங்களை அடுத்தக்கட்டமான உடல் தகுதித் தேர்வுக்கு (Physical Test) அழைத்துச் செல்லும். வினாத்தாளின் கடினத் தன்மை மற்றும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கட்-ஆஃப் மாறுபடும்.
எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் (Expected Cut-off):
கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கணிப்புப்படி, 70-க்கு இந்த மதிப்பெண்களை இலக்காக வைப்பது நல்லது:
- பொதுப் பிரிவு (General): ஆண்கள் 58-60+ | பெண்கள் 55-58+
- பிற்படுத்தப்பட்டோர் (BC): ஆண்கள் 56-58 | பெண்கள் 52-55
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC/DNC): ஆண்கள் 56-58 | பெண்கள் 52-55
- எஸ்சி (SC): ஆண்கள் 54-56 | பெண்கள் 50-53
- எஸ்சி (அருந்ததியர்): ஆண்கள் 50-53 | பெண்கள் 48-50
- எஸ்டி (ST): ஆண்கள் 48-52 | பெண்கள் 45-48
யாருக்கு முன்னுரிமை?
எழுத்துத் தேர்வில் அதிக மார்க் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் உடல் தகுதித் தேர்வு (15 மார்க்) மற்றும் நேர்காணல் (10 மார்க்). என்.சி.சி (NCC), என்.எஸ்.எஸ் (NSS) மற்றும் விளையாட்டுச் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்குக் கூடுதலாக 5 சிறப்பு மதிப்பெண்கள் கிடைக்கும். இதுதான் பல நேரங்களில் ‘கேம் சேஞ்சர்’ ஆக அமையும்.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இம்முறை இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகம். டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 படிக்கும் மாணவர்களும் எஸ்.ஐ தேர்வை எழுதுவதால் போட்டி கடுமையாக இருக்கும். 60 ப்ளஸ் (60+) மார்க் எடுத்துவிட்டால், நீங்கள் பாதி கிணற்றைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், உண்மையான வெற்றி ‘பிசிக்கல் டெஸ்ட்’டில் தான் இருக்கிறது. அங்கு ஒரு ஸ்டார் மிஸ் ஆனாலும் வேலை பறிபோகும் அபாயம் உண்டு. அதனால் கிரவுண்ட் பிராக்டிஸை இப்போதே தொடங்குவது புத்திசாலித்தனம்!.
