டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக இன்று (நவம்பர் 29) நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார் உமாமகேஸ்வரி.
இந்நிலையில், திடீரென அவரை வணிகவரித்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா இன்று உத்தரவிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. அதன் நியமனத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே இழுபறி நீடித்து வருகிறது.
மேலும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள உமாமகேஸ்வரிக்கு பதிலாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. இதற்கான நியமன அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியின் பல்வேறு விதமான குரூப் தேர்வுகளை எழுதி வருகின்றனர். மேலும், காலி பணியிடங்கள் மற்றும் தேர்வு தேதி அறிவிப்பு, தேர்வு நடத்தும் பணிகள், தேர்வு முடிவுகள் அறிவிப்பு என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ந்து பணிகள் இருக்கும்.
இந்நிலையில், திடீரென டிஎன்பிஎஸ்சி செயலாளர் மாற்றம் தற்போது செய்யப்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மேலும் தாமதங்கள் ஏற்பட கூடும் என தேர்வர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
லோகேஷ் தயாரிக்கும் முதல் படம் ‘Fight Club’!
தனியாரிடம் காலை உணவுத் திட்டம்… முதல்வர் ஒப்புதல்?: டிடிவி தினகரன் கேள்வி!