சிவில் நீதிபதி பணிக்கான முதன்மை தேர்வில் குளறுபடியா?: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

Published On:

| By christopher

இன்று நடைபெற்று வரும் சிவில் நீதிபதி பணிக்கான முதன்மை தேர்வில் குளறுபடி ஏதும் ஏற்படவில்லை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் (சிவில்) நீதிபதி காலிப்பணியிடங்கள் 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இதற்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு பணிகளில் உயர்நீதிமன்றம் பங்களித்து வருகிறது.

அந்தவகையில் சிவில் நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இந்த தேர்வெழுத 17,037 பட்டதாரிகள் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது.

அதன் முடிவில் தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களின்படி 2,544 பேர் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப் பட்டனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள 25 மையங்களில் நேற்று சிவில் நீதிபதி பதவிக்கான முதன்மைத் தேர்வு  தொடங்கியது. நேற்று காலையில் மொழிபெயர்ப்பு முதல் தாள் தேர்வும், மதியம் சட்டம் முதல் தாள் தேர்வும் நடைபெற்றன.

தொடர்ந்து இன்று காலையில் சட்டம் இரண்டாம் தாள் தேர்வு தொடங்கியது. அப்போது வினாத்தாளை பெற்ற தேர்வர்கள், சட்டம் இரண்டாம் வினாத்தாளில், மூன்றாம் தாளுக்கான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டி.என்.பி.எஸ்.சி சார்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், ”சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி தான், நீதிபதிகளுக்கான தேர்வு என்பது நடத்தப்படுகிறது.

உயர்நீதிமன்றம் தயாரித்து கொடுத்த கேள்வித்தாள்களையே தேர்வர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும்  தேர்வர்களின் புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளரிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட பதிவாளர், வினாத்தாளில் குளறுபடிகள் இல்லை என்றும், தேர்வை தொடர்ந்து நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்” என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இதனையடுத்து இன்று காலையில் நடைபெற்ற சட்டம் இரண்டாம் தாள் தேர்வைத் தொடர்ந்து, மதியம் சட்டம் மூன்றாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் ‘மசாலா பிரியாணி’!

உயிருக்கு ஆபத்தாகும் காற்று… டெல்லியில் நவம்பர் 10 வரை பள்ளிகள் மூடல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share