உண்மையை மறைப்பவர்களை நிராகரிப்பது தவறில்லை: நீதிமன்றம்!

Published On:

| By Balaji

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு உண்மையை மறைத்து தவறான தகவல்களுடன் விண்ணப்பிப்பவர்களை நிராகரிப்பது தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகத்தில் நிரப்பப்பட உள்ள 88 அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மங்கலநாதன் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையிலிருந்ததால் அவரது தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மங்கலநாதன், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்ததற்காக அவரை டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்க தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை ரத்து செய்ய வலியுறுத்தி மங்கலநாதன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில், ‘மனுதாரர் மீதான இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். ஒரு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி தரப்பில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதும் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் போதும் மனுதாரர் குற்ற வழக்கு இருப்பதை தெரிவிக்கவில்லை. தற்போது அவர் மீது வழக்குகள் இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கும் சமயத்தில் வழக்கு நிலுவையிலிருந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, டிஎன்பிஎஸ்சி விதிப்படி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள், குற்ற வழக்குகளை மறைப்பவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது கட்டாயமானது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும். இவற்றை மாற்றவோ தளர்த்தவோ உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

ADVERTISEMENT

எனவே குற்ற வழக்கு இருப்பதை விண்ணப்பத்தில் மறைத்த மனுதாரரின் தேர்வை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

**- பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share