கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் மற்றும் உயர்நீதிமன்றம் நியமித்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலானாய்வு குழு விசாரணை நடத்தி வந்தது.
இதனையடுத்து விசாரணைக்காக கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்ட இடத்தில் யாரும் நுழையாதபடி போலீசார் தடுப்பு அமைத்து அங்கிருந்த தடயங்களை பாதுகாத்து வந்தனர்.

இதற்கிடையே சிபிஐ வழக்குக்கோரி கூட்டநெரிசலில் பலியானவர்கள் குடும்பத்தினர் தாக்கல் மனுவின் படி, உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையின் படி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரோஷ்தகி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு இதுவரை மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள் மற்றும் சேகரித்த ஆவணங்கள் இன்று சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே, உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு போட்டுள்ள நிலையில்,
நேற்று இரவோடு இரவாக சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் பண்ணி இன்னைக்கு காலையில் பெயிண்ட் அடிச்சிட்டு இருக்காங்களாம். என்னடா நடக்குது ? வழக்கு விசாரணையில் இருக்கும் போது இதை எல்லாம் செய்யலாமா?” தவெகவினர் சிலர் புகைப்பட ஆதாரங்களுடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு இதுதொடர்பாக கரூர் மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் பெற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மாநகராட்சி தரப்பிலோ, நெடுஞ்சாலைத்துறை தரப்பிலோ இதுபோன்று எந்தப் பணியும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை. காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த வாரமே அங்கு கிடந்த காலணிகள் அகற்றப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கடை ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள் என்று கரூர் மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
