விபத்தை ஏற்படுத்தாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (பிப்ரவரி 26 ) நடைபெற்றது.
இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டுநர்களுக்கு பரிசாக தலா 100 கிராம் வெள்ளி நாணயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஒரு ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த 24 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநருடன் கூடிய நடத்துநர்களுக்கு வெள்ளி நாணயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து பணியின்போது இறந்த பணியாளர்களின் 6 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையிலான நடத்துநர் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. விழாவில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
-கவின், இரசிக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…