சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
இந்நிலையில், வரும் நாட்களில் அடுத்தடுத்த சுபமுகூர்த்த தினம் வருகிறது என்பதால் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தமிழக பதிவுத்துறைக்கு கூடுதல் டோக்கன் வழங்கக் கோரிக் கடிதம் எழுதியுள்ளது.
அதனை ஏற்று தமிழ்நாடு பதிவுத்துறை தரப்பில் இன்று அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான 24.10.2025 (வெள்ளிக்கிழமை) மற்றும் 27.10.2025 (திங்கள் கிழமை) அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களான 24.10.2025 மற்றும் 27.10.2025 தேதிகளில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு புதிகாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும்.
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் நூறு அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
