நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோரின் பதவிக்காலமும், அதிமுக எம்பி தம்பிதுரை மற்றும் அதிமுக ஆதரவு பெற்ற தமாகா எம்பி ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கும், மற்ற மாநிலங்களில் காலியாகும் 31 பதவிகளுக்கும் சேர்த்து வரும் மார்ச் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை நடைபெற்றது.
திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக தரப்பில் மு. தம்பிதுரையும், கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில், இந்த 6 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏனைய சுயேச்சை வேட்பாளர்கள் ஏழு பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு இன்று (மார்ச் 9) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.
திமுக தரப்பில் 4 பேர், அதிமுக தரப்பில் 2 பேர் என மொத்தம் 6 பேரைத் தவிர வேறு யாரும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடாததால், இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.
