தமிழ்நாட்டில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனையில் ஒரு நீதிபதி கலவரத்திற்கு வித்திடுவதாக திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் (சிபிஎம்) நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் சுகாதாரப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்புக்கான வரி விதிப்பு மசோதா மீதான விவாதத்தில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் கலவரத்திற்கு வித்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையை தனது ஒருதலைப்பட்சமான தீர்ப்பை அமலாக்க அவர் பயன்படுத்தி உள்ளார். இது மாநில காவல்துறைக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் அபாயகரமான நடவடிக்கை. தமது தீர்ப்பை அமலாக்குவதற்கான காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை வழங்க முயற்சிக்கிறார். இந்த நீதிபதியின் நடவடிக்கையால் மதக் கலவரம் உருவாகும்; அவர் மீது ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இவ்வாறு சச்சிதானந்தம் கூறினார்.
