அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பித்துள்ளது. tn govt order to govt employees on identity card
இதுதொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களும் அலுவலக நேரத்தில் புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஏற்கெனவே இதுதொடர்பாக அரசாங்கத்தால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், சில துறைகள் மேற்கண்ட வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஜூலை 7ஆம் தேதி அளித்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், குறிப்பாக பொதுமக்களுடன் தொடர்பு கொள்பவர்களுக்கும், ஏற்கனவே புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என்றால், அறுபது (60) நாட்களுக்குள் அதனை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும், அடையாள அட்டைகளை அணிவது தொடர்பான விதி கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அத்தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள துணை அலுவலகங்களுக்கு, அரசு உத்தரவுகள்/அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி, ஊழியர்கள் புகைப்பட அடையாள அட்டைகளை தவறாமல் அணிய அறிவுறுத்துமாறு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.