கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு விசாவுடன் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
திட்ட தொகையில் பொதுப்பிரிவு பயனாளர்கள் 10 சதவிகிதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவிகிதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவிகிதம் அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
மானிய தொகை மூன்று ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன் தொகையில் சரி செய்யப்படும்.
திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின், ஆறு மாதங்கள் கழித்து முதல் தவணை தொகையினை வங்கியில் செலுத்த ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்குள் கடன் தவணையினை திரும்ப செலுத்த வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற,
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜா நகரம், அரியலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 8925533925, 8925533926 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: ரெய்டுக்குப் பின் அமைதி… ஐடி பம்முகிறதா, பாய்கிறதா?
“கார்கேவை கொல்ல சதி”: காங்கிரஸ் குற்றசாட்டு!
பிடிஆரை சுற்றி மீண்டும் புயல்!
மே மாதம்: விடுமுறை நாட்களிலும் இயங்கும் வண்டலூர் பூங்கா!
கன்னித்தன்மை பரிசோதனை: “ஆளுநரின் ஆதாரமற்ற புகார்”- மா.சுப்பிரமணியன்
