தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கான முதல்வர் ஸ்டாலின் அறிவித்த TAPS ஓய்வூதிய திட்டம் அதிருப்தி அளிப்பதாக கூறி மீண்டும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் 20 ஆண்டுகளாக போராட்டத்துக்குப் பின்னர் TAPS ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தை தொடக்கத்தில் அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றன. CPS ஒழிப்பு இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்தன.
இத்திட்டம் தொடர்பான அரசாணை அடுத்த 2 வாரங்களில் வெளியிடப்படும் எனவும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் TAPS ஓய்வூதிய திட்டத்துக்கு தலைமை செயலக சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்டவை அதிருப்தியையும் வெளிப்படுத்தின.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (ஜனவரி 8) திடீரென தலைமை செயலக சங்கத்தின் ஒரு பகுதியினர் ஒன்று கூடினர். தலைமை செயலக சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ரகுராம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகம் வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தை உணவு இடைவேளையின்போது அவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, சங்கத் தலைவர் வெங்கடேசன் இல்லாததால், செயலாளர் ஹரிசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை உறுப்பினர்கள் சந்தித்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, “சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யும் திட்டத்தை சங்கம் எப்படி வரவேற்கலாம்” என்று கேள்வி எழுப்பி, பழைய ஓய்வூதியத் திட்டமே ஒற்றைக் கோரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் தலைமை செயலக சங்கத்தின் பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தலைமை செயலக சங்க நிர்வாகிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அரசு பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.
