தமிழக அரசின் இஸ்லாமிய தலைமை காஜி சலாகுத்தீன் முஹம்மது அயூப் வயது மூப்பு காரணமாக மே 24-ஆம் தேதி இரவு 9 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. தலைமை காஜியின் இறுதிச்சடங்கு இன்று (மே 25) மாலை 5 மணிக்கு திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நடைபெற உள்ளது. TN Govt Chief Kazi Salahuddin Passed Away
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,
“தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர். மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம்.அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தலைமை காஜி மறைவு இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. TN Govt Chief Kazi Salahuddin Passed Away
