சென்னையில் சிறுமி ஹாசினி பலாத்கார படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
2017-ஆம் ஆண்டு சென்னை போரூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஹாசினி பலாத்கார படுகொலை வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கீழ் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்தன.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி, தஷ்வந்தை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் நேரடியானவை அல்ல; குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லை; மரபணு- டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளும் பொருந்தவில்லை; ஆகையால் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
