தமிழகம் முழுவதும் 280 உதவி ஆய்வாளர் காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டது அமலுக்கு வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (ஜூன் 6) உத்தரவிட்டார். tn govt approved 280 police station upgrade
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அப்போது அவர், ”280 இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, எஸ்ஐ தலைமையிலான காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக ரூ.1.18 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்” என அறிவித்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் 280 எஸ்ஐ தலைமையிலான காவல் நிலையங்கள், இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கடந்த மே 29ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அது இன்று முதல் அமலுக்கு வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
பொதுவாக மக்கள் தொகை அதிகரிக்கும் போது, அதற்கேற்ப மக்களுக்கான பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் கருத்தில் கொண்டு காவல் நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும் அல்லது தரம் உயர்த்தப்படும்.
எஸ்.ஐ தலைமையிலான காவல் நிலையங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரையிலான அதிகாரம் மட்டுமே உண்டு. ஆனால் அவை இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதன் மூலம், அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு மேம்பாடு, குற்றங்களை தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய முடியும்.
அப்போது அதிக எண்ணிக்கையில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்படுவர். இதனால் ரோந்துப் பணி மற்றும் பிற காவல்துறை பணிகளைச் செய்ய முடியும்.
குற்றப் புலனாய்வுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதால், குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.