ADVERTISEMENT

5 வருஷமாச்சு… மீண்டும் வருகிறது இலவச லேப்டாப்: எல்காட் டெண்டர் ரேஸில் எச்பி, டெல், ஏசர்! மாணவர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

TN Government free laptop scheme

சென்னை:

“பள்ளிக்கூடம் முடிச்சாச்சு, காலேஜ் வந்தாச்சு… அந்த லேப்டாப் எப்பதான் வரும்?” என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏங்கிக் கிடந்த அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, ஒரு வழியாக விடிவு காலம் பிறக்கப்போகிறது. கொரோனா மற்றும் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் மிக முக்கியமான ‘இலவச லேப்டாப்’ திட்டம், மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

சுமார் 11 லட்சம் லேப்டாப்களைக் கொள்முதல் செய்வதற்கான மெகா டெண்டர் பணிகளை, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) முடுக்கிவிட்டுள்ளது.

டெண்டர் ரேஸில் யார் யார்?

ADVERTISEMENT

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்காக வெளியிடப்பட்ட இந்த சர்வதேச டெண்டரில், உலகின் முன்னணி நிறுவனங்களான எச்பி (HP), டெல் (Dell) மற்றும் ஏசர் (Acer) ஆகிய மூன்று ஜாம்பவான்கள் களத்தில் குதித்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கிடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது.

யாருக்கெல்லாம் லேப்டாப்?

ADVERTISEMENT

இந்த முறை விநியோகம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்கள்: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் பணிக்காக லேப்டாப் வழங்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

மாணவர்கள்: கடந்த ஆண்டுகளில் விடுபட்ட மாணவர்கள் மற்றும் தற்போது 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

என்ன ஸ்பெக்?

“சும்மா பேருக்கு டப்பா மாதிரி இல்லாமல், நல்ல குவாலிட்டியா இருக்கணும்” என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விண்டோஸ் 11 (Windows 11) இயங்குதளம், அதிவேக பிராசஸர் மற்றும் நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய லேப்டாப்களைக் கொள்முதல் செய்ய எல்காட் நிபந்தனை விதித்துள்ளது.

ஏன் இவ்வளவு தாமதம்?

2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா பரவல் மற்றும் கடுமையான நிதிச்சுமை காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் இதைத் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இத்திட்டத்தைத் தூசி தட்டியுள்ளது தமிழக அரசு.

அடுத்தக்கட்டம் என்ன?

தற்போது டெண்டர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்ப மதிப்பீடு (Technical Bid) மற்றும் விலைப்புள்ளி மதிப்பீடு (Price Bid) ஆகியவை ஆய்வு செய்யப்படும். இதில் குறைவான விலைக்கு, தரமான லேப்டாப்களைத் தர முன்வரும் நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கப்படும். அனேகமாக அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திற்குள், மாணவர்களின் கைகளில் இந்த ‘புது லேப்டாப்’ தவழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காத்திருப்புக்குக் கிடைக்கப்போகும் பரிசு என்பதால், மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share