இன்று (ஏப்ரல் 6) தமிழகம், கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்களின் விரல்களில் பூசுவதற்காக 10 மில்லி கொண்ட 1,74,700 மை பாட்டில்கள் தமிழகத் தேர்தல் பயன்பாட்டுக்காகவும், 1,01,928 மை பாட்டில்கள் கேரளாவுக்கும் தேர்தல் ஆணையம் வாங்கியுள்ளது.
தமிழகம், கேரள மாநிலத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் சுமார் 14 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்காளர் வாக்களிக்க எலெக்ட்ரானிக் வாக்குபதிவு இயந்திரம், வெப் கேமரா வசதி எனப் பல நவீன வசதிகள் இருந்தாலும் இவர்கள் வாக்களித்ததற்கு அடையாளமாக விரலில் அழியாத மை தடவ வேண்டும். ஒவ்வொரு சாவடிக்கும் இரண்டு பாட்டில்கள் மை வழங்கப்படுகிறது. இரண்டு வாக்குச் சாவடிகளுக்கு ஒரு பாட்டில் மை கூடுதலாக வைக்கப்படும்.
ஒரு பாட்டிலில் 10 மில்லி இருக்கும். வாக்குச்சாவடியில் அதிகாரி வாக்காளர்களின் இடது ஆள்காட்டி விரலில் மை பூசுவார். மை 40 விநாடிகளுக்குள் காய்ந்து விரலில் பல நாட்கள் இருக்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) மூலம் வாக்குகள் மாற்றப்பட்ட பின்னரும் கூட தங்கள் உரிமையைப் பயன்படுத்திய வாக்காளர்களை அடையாளம் காண அழியாத மை இன்னும் பயன்படுத்தப்படுகிறது. போலி வாக்களிப்பைத் தடுக்கும் பொருட்டு இந்த முறை செயல்படுத்தப்பட்டது. இந்த அழியாத மையை மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் தயாரித்து வழங்குகிறது.
கர்நாடக அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் இந்தியாவில் அழியாத மை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனமாக உள்ளது.
இந்த நிறுவனம் மைசூர் லாக் அண்ட் பெயின்ட்ஸ் லிமிடெட் என்ற பெயரில் 1937ஆம் ஆண்டில் அப்போதைய மைசூரு மன்னர் கிருஷ்ணா ராஜா வாடியாரால் நிறுவப்பட்டது. புகழ்பெற்ற மைசூர் சோப்புகள் மற்றும் மைசூர் பட்டு புடவைகளும் அவரது காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அழியாத மையின் பின்னணி மிகவும் சுவாரஸ்யம் மிக்கது. இந்தியத் தேர்தல்களில் ஆள்காட்டி விரலில் மை இடும் நடைமுறை 1962ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிமுகமானது. அந்தக் காலக்கட்டத்தில், வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கு அடையாள அட்டைகள் எதுவும் கிடையாது. இதனால் வாக்குப்பதிவில் மோசடிகளும், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கள்ள ஓட்டுகளை போடுவதும் பரவலாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்ட தேர்தல் ஆணையம், தேசிய இயற்பியல் ஆய்வகத்தை அணுகியது.
சில்வர் நைட்ரேட் என்ற ரசாயனத்தைக் கொண்டு இந்த மை தயாரிக்கப்படுகிறது. மையில் சில்வர் நைட்ரேட்டின் அடர்த்தி 7 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதம் வரை மாறுபடுகிறது. இதன் மீது புற ஊதா வெளிச்சம்படும்போது, அது தோலில் கறை போன்று படிந்துவிடுகிறது. இந்த அடையாளக் கறையை நீக்க முடியாது. மை இடப்பட்டதிலிருந்து 72 முதல் 96 மணி நேரம் வரை, அதாவது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு அடர்த்தியான ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். இந்த மை இரண்டு முதல் நான்கு வாரம் வரை இருக்கும் தன்மை கொண்டது.
எம்.எல்.கோயில் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவால், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஊதா நிற மை கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
**-சக்தி பரமசிவன்**
