கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்லவிருக்கிறார்.
தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைக் கொண்டது தென் மண்டல குழு. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அண்டை மாநில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். இதன்மூலம், இரு மாநிலங்களிடையேயான சா்ச்சைக்குரிய பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மாநிலத்தின் உயா்நிலை உறுப்பினா்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு மண்டல குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மண்டலக் குழுக்கள் பல பிரச்சினைகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் மண்டல குழுக்களின் மூலம் 18 கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு முன்னா் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் 29வது கூட்டம் (2021, நவம்பர் 14) திருப்பதியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தென் மண்டல கவுன்சிலின் தலைவராக இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”மண்டலக் குழுக்கள், இயற்கையிலேயே ஆலோசனை வழங்கும் அமைப்புகளாக அமைந்திருப்பதால்தான், மாநிலங்களுக்கு இடையேயான பல பிரச்னைகளை வெற்றிகரமாக தீா்த்து வைக்க அந்தக் குழுக்களால் முடிந்திருக்கிறது’ என்றார்.
இந்த நிலையில், 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 3ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார். இந்தக் கூட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், சமூக நலன் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் காவிரி, முல்லைப் பெரியாறு குறித்த நீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆகையால், இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜெ.பிரகாஷ்
புறக்கணிக்கப்பட்ட இலவச அறிவுரை !
