மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு இயக்கத்தில் மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 5 பேரை போலீசார் இன்று (மார்ச் 7) கைது செய்துள்ளனர். tn bjp cadres arrested by police
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், புதிய கல்விக்கொள்கை கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து திமுக மற்றும் பிற தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இரண்டாவது நாளாக இன்று பாஜகவினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
சில இடங்களில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த நிலையில், பிஸ்கட் கொடுத்து மாணவர்களை பாஜகவினர் கையெழுத்திட வைத்தனர். அதே போன்று சில இடங்களில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கையெழுத்திடுமாறு பாஜகவினர் கட்டாயப்படுத்திய காட்சிகளையும் காண முடிந்தது.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!tn bjp cadres arrested by police
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி முகப்பு வாயிலில் பாஜக சார்பில் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அப்போது பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்களை பாஜகவினர் பிஸ்கட்டுகள் வழங்கி, வலுக்கட்டாயமாக இழுத்து கையெழுத்திட வைத்ததாக கூறப்படுகிறது.
ஐந்து பேர் கைது!tn bjp cadres arrested by police
இதுதொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல குழு சார்பில் அளித்த புகாரின் பேரில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, நிகழ்சி ஏற்பட்டாளர் பாஜக கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் மண்டல தலைவர் மோகன் குமார்(45), சென்னை கிழக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் கோட்டீஷ்வரன்(45), முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பரசு(44) ஆகியோர் மீது 126(2), 192, BNS Act & 3 JJ Act ஆகிய 4 பிரிவின் கீழ் கண்ணகி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குவிந்த பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் வைஷ்ணவி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காவல் நிலைய வளாகத்தில் இருந்து வெளியேற்றினார்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.