திருப்பதியில் கூட்டநெரிசல்… 4 பேர் பலியான சோகம்!

Published On:

| By Selvam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் வரிசையில் நின்ற நான்கு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 10-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, 19-ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்தநிலையில், ஜனவரி 10, 11,12-ஆம் தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட் நாளை (ஜனவரி 9) அதிகாலை 5 மணிக்கு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 94 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று மதியம் முதலே கவுன்ட்டர்கள் முன்பாக பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் நான்கு பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பதி கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பதிக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share