நெல்லையில் விநாயகர் சிலை வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதற்காக பல வடிவங்களில் பல பெயர்களில் விநாயகர் சிலைகளை வாங்கி பலரும் பிரதிஷ்டை செய்வார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி, இந்து மகாசபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதேபோல் வீடுகளிலும் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி கடந்த மாதமே தொடங்கியது.
நெல்லை மாநகர பகுதிகளில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நெல்லை மாநகர பகுதிகளில் பாளையங்கோட்டை சமாதானபுரம் கிருபாநகர், மார்க்கெட் பகுதிகள், சீவலப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் பாளையங்கோட்டை அருகே உள்ள கிருபா நகரில் வட மாநில தொழிலாளர்கள் இங்கு முகாமிட்டு 100 ரூபாய் தொடங்கி 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள்.
இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்க கூடிய விநாயகர் சிலைகளை பலரும் வாங்குவதற்காக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்பொழுது இந்த விநாயகர் சிலை விற்பனையானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நெல்லை சரவணன்