திமுகவின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 16-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை முடிவடைகிறது.
திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ், அதிமுகவின் தம்பிதுரை, தமாகா ஜிகே வாசன் ஆகியோரது பதவி காலம் முடிவடைவதால் இத்தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா எம்.பிக்கள். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் காங்கிரஸுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து திமுக 2 இடங்களுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது. ஏற்கனவே 4 முறை மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றிய திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
