கரூர் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய புகாரில் கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன் என்பவருக்கு சொந்தமான 26 லாரிகளை திருச்சி டிஐஜி வருண்குமார் இன்று மே 5-ந் தேதி அதிகாலையில் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Tiruchi DIG Varunkumar Conducts Early-Morning Raid
கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான காளியப்பன், அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவரைப் போல மற்றவர்களும் அமராவதி, காவிரியில் மணல் அள்ளி வந்தனர்.
இதனை போலீசார் தடுக்க முயற்சித்தாலும், “நாங்கள் மாட்டு வண்டியில்தான் மண் எடுக்கிறோம். எங்களை தடுக்கிறீங்க.. ஆனால் லாரியில் மணல் அள்ளும் திமுகவினர் லாரிகளை பிடிப்பதே இல்லையே” என குற்றம்சாட்டினர்.
இந்த பின்னணியில், அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க டிஐஜி வருண்குமார் நேற்று இரவே ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்தார். இந்த டீம் இன்று அதிகாலையில் அமராவதி, காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள வந்த லாரிகளை தடுத்து பறிமுதல் செய்தது.
திமுக பிரமுகர் காளியப்பனின் ஆட்கள் மணல் ஏற்றிவைத்ததாக கூறப்படும் 12 டிப்பர் லாரிகள், 14 மணல் இல்லாத காலி லாரிகள் மொத்தம் 26 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடி சம்பவம் திருச்சி சரகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.