சென்னையில் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதை அடுத்து நேற்று (நவம்பர் 11) முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, உள்ளிட்ட 28 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதலே தொடர்மழை பெய்து வந்தது. தொடர்ந்து அதிகாலை பெய்த மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இன்றும் இரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில் கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, வளசரவாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அதிகாலையில் அலுவலகத்திற்கு கார், பைக்கில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இருப்பினும் தேங்கும் மழைநீரை ராட்சத எந்திரங்கள் கொண்டு வெளியேற்றும் பணியில் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா