திமுக எம்.பி-க்கள் கூட்டம்… நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

Published On:

| By Selvam

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் நாளை (மார்ச் 10) தொடங்க உள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 9) நடைபெற்றது. DMK MPs meeting resolution

இந்த கூட்டத்தில், தொகுதி மறுவரையறை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

“தீர்மானம்: 1

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்

தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பாஜக-வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடைய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 2

மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 3

தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம்.

டெல்லியில் திமுக மற்றும் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து Minimalist உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. DMK MPs meeting resolution

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share