காவல் உயர் அதிகாரிக்கு பதவி உயர்வு… வரலாற்றுப்பழியில் திமுக : சீமான் எச்சரிக்கை!

Published On:

| By christopher

DMK in bad history Seeman

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவது அதிமுகவோடு சேர்த்து திமுகவும் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.

டி.ஜி.பியாக பதவி உயர்வு!

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு, மே 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் 3,000 பக்கங்கள்கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதில், அப்போதைய கலெக்டராக இருந்த வெங்கடேஷ், தென்மண்டல ஐஜி-யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ், டிஐஜி கபில் குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவுக்கு சில தினங்களுக்கு முன்பு டி.ஜி.பி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

DMK in bad history Seeman

மக்களுக்குச் செய்யும் சனநாயகத்துரோகம்!

இந்த நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான போராட்டத்தில் மண்ணின் மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 14 பேரைக் கொன்றொழித்த விவகாரத்தில், நீதிபதி அருணா ஜெகசதீசன் ஆணையத்தால் நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளுள் ஒருவரான சைலேஷ்குமார் யாதவுக்கு பதவி உயர்வு வழங்கியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அப்பாவி மக்களைக் கொன்றுகுவித்த குற்றவாளிகளைக் கூண்டிலேற்றி, அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்டு, இன்றைக்கு அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தாமிர ஆலைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் காவல்துறையினரால் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அருணா ஜெகதீசன் ஆணையம் தோலுரித்துக்காட்டி, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித முன்நகர்வையும் செய்யாத திமுக அரசின் செயல் வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத்துரோகமாகும்.

ஒருவர்மீதுகூட குற்றவியல் நடவடிக்கை இல்லை!

அருணா ஜெகதீசன் ஆணையம் 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தும் இதுவரை ஒருவர்மீதுகூட குற்றவியல் நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் செயல் வெளிப்படையான மோசடித்தனம் இல்லையா?

அவசரநிலை காலக் கட்டத்தில் காவல்துறையினரால் தான் துன்புறுத்தப்பட்டதை இன்றளவும் பேசும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கடந்த அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானவர்களின் குடும்பத்துக்கு நியாயத்தைப் பெற்றுத்தர மறுப்பதேன்?

எந்தக் காவல்துறை அதிகாரி, மக்களின் சாவுக்குக் காரணமானவர்களுள் ஒருவரென அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சுமத்தியதோ அதே அதிகாரிக்கு திமுக அரசு பதவியுயர்வு வழங்குகிறதென்றால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்துகிறதா திமுக அரசு?

துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் வரை எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுதான் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் குரலாக இருக்கும்போது, அதற்கு முற்றிலும் நேர்மாறாக செயல்படும் திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு அப்பட்டமான மக்கள் விரோதமாகும்.

காவல்துறையினரை ஏவிவிட்டு மக்களைக் கொன்றுகுவித்த அதிமுக அரசுக்கும், கொலையாளிகளென்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு?

மாநில அரசின் கைகளிலே அதிகாரமிருந்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருந்தும், அதனை செய்வதற்குரிய ஆதரவு மக்களிடமிருந்தும் விடாப்பிடியாய் செய்ய மறுத்து கொலையாளிகளைக் காப்பாற்றுவது ஏன் முதல்வரே?

அதிமுகவோடு நாளும் வார்த்தைப்போர் செய்து, லாவணிச்சண்டை போடும் திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த பெருங்குற்றத்திற்கு நீதியைப் பெற்றுத் தர மறுப்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் நீங்கள் பேசும் சமூக நீதியா முதல்வரே? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா?

திமுக மீது வரலாற்றுப்பழி!

திமுகவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கூறுவோரைக்கூட வழக்குத்தொடுத்து கைதுசெய்து சிறைப்படுத்தும் திமுக அரசு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய கொலையாளிகள் மீது வழக்குத் தொடுக்க மறுத்து அவர்களைக் காப்பாற்றி வருவது ஏற்கவே முடியாதப் பேரவலமாகும்.

ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் துள்ளத் துடிக்கப் பச்சைப்படுகொலை செய்திட்ட காவல்துறையினர் மீதும், ஏவிவிட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, சட்ட நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

மாறாக, அதனை செய்ய மறுத்து, மக்களைப் படுகொலை செய்தவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற துணைபோனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எனும் அரசப்பயங்கரவாத நடவடிக்கையில், அதிமுகவோடு சேர்த்து திமுகவும் வரலாற்றுப்பழியை சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரூ.19,850 கோடி : தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம்!

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share