தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் (SIR) அடுத்த வாரம் தொடங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக மாறி விடுவோம் என்பதால் எதிர்க்கிறார்கள் என பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 24) பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வருங்காலங்களில் தேர்தல் நடக்கக்கூடிய மாநிலங்களில் எஸ்ஐஆரை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு எஸ்ஐஆர் நடைமுறைப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை
சென்னையில் ஒரு தொகுதியில் 13000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது அதற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள் தலையிட்டுள்ளார்கள். பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்குகாளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்று குற்றம் சொன்னார்கள். ஆனால் தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியில் 9000 வாக்குகள் கூடுதலாக உள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளது. வரக்கூடிய தேர்தலில் ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக வரப்போகிறோம் என்பதற்காக இந்த குற்றச்சாட்டை கூறுகிறார்கள் என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர் மீது திருமாவளவன் கார் மோதியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த சம்பவத்தில் திருமாவளவன் மாற்றி மாற்றி பேசுகிறார். தேர்தல் வருகிறது தேர்தலில் நல்ல ஒரு பதில் கிடைக்கும் என்றார். மேலும் சமூக நீதியை பற்றி பேசுகிறார்கள். ஆனால் இன்றைக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறுகிறார். சமூக நீதியை பற்றி பேசுகிறார்கள் அவர்களது கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதியை தர முடியும்.
