கர்நாடக மாநில தேர்தல் உங்களுக்கானது அல்ல, மக்களுக்கானது என்பதைப் பிரதமர் மோடி தெரிந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை விஷப்பாம்பு என்று கூறியதாகவும் இதுபோன்று தன்னை காங்கிரஸ் கட்சியினர் 91 முறை அவதூறாகப் பேசியதாகவும் பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இது பொது வாழ்க்கை மோடி ஜி. இதையெல்லாம் கடந்துதான் முன்னேற வேண்டும். என் அண்ணனிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (மே 1) துமகுரு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,
‘இந்த தேர்தல் என்பது மக்களுக்கானது, உங்களுக்கானது அல்ல என்பதைப் பிரதமர் மோடி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இங்கு கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகிறீர்கள்.
ஆனால் கர்நாடகாவைப் பற்றியோ, இம்மாநில மக்களை பற்றியோ நீங்கள் பேசுவதில்லை. உங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாநிலத்துக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்லவில்லை.
வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்றும் சொல்லவில்லை.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழல் எதிர்ப்பு என எதுவும் உங்கள் பேச்சில் இல்லை. இதை பற்றித்தான் நீங்கள் பேச வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், நீங்கள் இங்கு வந்து பேசும் போது எங்கள் தலைவர்களான சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரை பற்றி பேசுகிறீர்கள்.
ஆனால் உங்கள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரது பெயரையும் ஒன்று அல்லது இரண்டு முறையாவது சொல்லுங்கள். அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்று விமர்சித்துள்ளார்.
பிரியா
அதிமுகவின் போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: ஓபிஎஸ்
பிடிஆர் – முதல்வர் சந்திப்பு : டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்!