திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் இருந்தும் உடனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஏன்? என மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சிபிள்ளையார் கோவில் பகுதியில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இருப்பினும் கோவில் நிர்வாகம், வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே நேற்று தீபம் ஏற்றியது.
இதனால் ராம ரவிக்குமார் உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனை உடனே விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், CISF பாதுகாப்புடன் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தற்போது விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது, ”மனுதாரரும் நீதிபதியும் நீதிமன்ற அவமதிப்பு என்பதை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டனர்; நீதிமன்ற அவமதிப்பு தொடர கால அவகாசம் இருந்தும் உடனே வழக்கு தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்டது எப்படி நீதியாகும்?” என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள்,
- தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அப்படியான நிலையில் உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத் தாக்கல் செய்தது ஏன்? என மனுதாரரை நோக்கி கேள்வி எழுப்பினர்.
மேலும்
- மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்ய விடாமல் தடுப்பது என்பது அல்ல. இரண்டு தரப்புமே இணைந்து தங்களுக்கு செய்ய அனுமதிப்பதிலும் இருக்கிறது மத நல்லிணக்கம் என்றனர்.
அதேபோல,
- நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த தீபத் தூண்- கோவிலை விட மிகப் பழமையானதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
