திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் ‘சனாதன தர்மத்தின்’ மீது திமுக அரசு தாக்குதல் நடத்திவிட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக எல்.முருகன் தமது எக்ஸ் பக்கத்தில், “ திமுகவின் கொடூர ஆட்சி, மீண்டும் ஒரு முறை இந்துக்களின் முதுகில் குத்தியுள்ளது.
பாசிச திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை மீறி காவல் துறையை ஏவி திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் இந்து சமுதாய மக்களை தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்துக்களின் நம்பிக்கையை மோசடி திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தகர்த்தெறிந்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு அரசியல் சட்டத்தை படுகொலை செய்துள்ளது.
உயர் நீதிமன்றம் இரண்டாவது முறை உத்தரவு பிறப்பித்த பிறகும் கூட 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி, இந்துக்களின் நம்பிக்கை மீதும் சனாதன தர்மத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது.
நாசக்கார திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என கூறியுள்ளார்.
அண்ணாமலை தமது எக்ஸ் பதிவில், ”திமுக அரசின் சனாதன தர்மத்தின் மீதான விரோதம் வெளிப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை ஏன் திமுக அரசு தொடர்ந்து குறி வைக்கிறது.. நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எந்த மதிப்புமே இல்லையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
