திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று டிசம்பர் 4-ந் தேதி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.
- திருப்பரங்குன்றம் மலையில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னை.
- 2014ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 2017-ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படியே தமிழ்நாடு அரசு செயல்படுகிறது
- தற்போது புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்க்க அங்கு அனுமதி அளிக்கவில்லை.
- உயர் நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது உள்ளிட்டவை அந்த மனுவில் இடம் பெற்றுள்ளன.
இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பாக டிசம்பர் 5-ந் தேதி தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட உள்ளனர்.
