திருப்பரங்குன்றம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு 2 நாட்களில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி தீபம் ஏற்ற முயன்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய அந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று (டிசம்பர் 5) தமிழக அரசு வழக்கறிஞர் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு வழக்கு நடைமுறைப்படி இரண்டு நாட்களில் விசாரணைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு தெரிவித்துள்ளது.
இதனால் திருப்பரங்குன்றம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
