திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுக்கு தாவ இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் 38 ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல மத்திய ரயில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை எடுத்துள்ளார். எக்ஸ்பிரஸ் மற்றும் உள்ளூர் ரயில்கள் வேறு வேறு நிலையத்தில் நின்று செல்லும். இந்த நிதி ஆண்டுக்கு மட்டும் ரூ.6,626 கோடி ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் போது ரூ.871 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தவறு
தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது என்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தவறானது என்றார்.
திருமா பயப்படுகிறார்
திருமாவளவன் மாறி மாறி பேசி வருவது நிலையாக இல்லை என்பதை காட்டுகிறது தூய்மைப்பணியாளர்கள் விவகாரத்தில் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் திருமாவளவன் நிலையாக இல்லை. பட்டியல் இன மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைத்து வருகிறார். பட்டியலின மக்கள் மீது சிறிதளவும் அக்கறை இல்லை. கேள்வி கேட்டால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என பயப்படுவதாக எல். முருகன் தெரிவித்தார்.
அமித்ஷா தமிழகம் வருகை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 22-ந் தேதி தமிழகம் வருகிறார். மைத்ரேயன் உள்ளிட்டோர் திமுகவுக்கு சென்றாலும் கூட்டணியில் பாதிப்பில்லை. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. திமுகவில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர்.
தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் யாத்திரையை பார்த்து முதல்வர் பயப்படுகிறார். மேலும் தி.மு.க.வில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர். ” என்றும் தெரிவித்தார்.
