”தமிழ் திரையுலகில் அசிங்கப்படுத்துகிறார்கள்” : வேல ராமமூர்த்தி வேதனை!

Published On:

| By christopher

தமிழ் சினிமாவில் காலங்காலமாக இருந்து வரும் கதை திருட்டு குற்றசாட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் ஜனவரி 12 அன்று வெளியான கேப்டன் மில்லர் படத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அதே நாளில் வெளியான அயலான் படத்தின் கதை ஆங்கிலப்படத்தின் தழுவல் என சமூகவலைதளங்களில் பட வெளியீட்டுக்கு முன்பே விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனால் வழக்கம்போல கவனம் பெறாமல் போனது.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கேப்டன் மில்லர், அயலான் முந்தியது எந்தப் படம் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூட்டை கிளப்பி வரும் சூழலில் கேப்டன் மில்லர் எனது பட்டத்து யானை நாவலின் காப்பி என எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி குற்றம் சுமத்தியிருப்பது தமிழ் சினிமா வட்டாரங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.

அசிங்கமாக இருக்கிறது!

கேப்டன் மில்லர் பற்றி வேல ராமமூர்த்தி கூறியிருப்பதாவது, “கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். என் நாவலின் ஹீரோ, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பார். இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

அதை கொஞ்சம் மாற்றி ‘கேப்டன் மில்லர்’ படமாக எடுத்துள்ளனர். நானும் சினிமாவில்தான் இருக்கிறேன். என்னிடம் அனுமதி கேட்டு அதை எடுத்திருக்கலாம். இதுபோன்று என் சிறுகதைகள், நாவல்களில் இருந்து நிறைய விஷயங்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக இருக்கிறது. ஒரு படைப்பாளியாக இது வேதனையாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

They are making ugly in the Tamil film industry

சரி செய்ய முடியாத ஒன்றாக உள்ளது!

இது சம்பந்தமாக தமிழ் சினிமா எழுத்தாளர்கள், இயக்குநர்கள் வட்டாரத்தில் பேசிய போது,  “தென் மாவட்டங்களில் காலங்காலமாக கூறப்பட்டு வரும் நாட்டுப்புற கதைகள், பாடல்களை எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை, எழுத்தாற்றலால் மெருகூட்டி நாவல்களாக, பாடல் தொகுப்புகளாக வெளியீட்டு வருகின்றனர். அந்த வகையை சேர்ந்ததுதான் பட்டத்து யானை நாவலும்.

ஒரு கதையை பலரும் அவரவர் கற்பனைக்கேற்ப திரைக்கதையாக வடிவமைக்கின்றனர். வாய்ப்பு கிடைப்பவர்கள் முதலில் படத்தை இயக்குகின்றனர். இது இங்கு தவிர்க்கவோ, சரி செய்ய முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

எழுத்தாளர்களுக்கு மரியாதை இல்லை!

குறிப்பிட்ட நாவலை, அல்லது பதிவு செய்து வைக்கப்பட்ட திரைக்கதையை காட்சி மாற்றம் இல்லாமல் திரைப்படமாக்கினால் அது அப்பட்டமான கதை திருட்டு என கூற முடியும். சுதந்திர போராட்டம், அதனை சார்ந்து எழுதப்படும் திரைக்கதைகளை கதை திருட்டு என்கிற வரையறைக்குள் அடைத்துவிட முடியாது.

தமிழ் சினிமா இயக்குநர்கள் மத்தியில் நாவல்கள், திரைக்கதை இவற்றுக்கு உரிய முக்கியத்துவமும், அதற்கான நிறைவான ஊதியத்தை, சன்மானத்தை, அங்கீகாரத்தை வழங்க தவறி வருகின்றனர் என்பது அப்பட்டமான உண்மை. இங்கு எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் மரியாதையே இல்லை.

நட்சத்திரங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை கொடுத்து படம் தயாரிக்கவும், இயக்கவும் செய்கிறார்கள். ஆனால் அதற்கு ஆதார சுருதியாக இருக்கும் திரைக்கதைக்கு உரிய சன்மானம், அல்லது விலை கொடுத்து சட்டபூர்வமாக வாங்கும் நடைமுறைக்கு தமிழ் சினிமா இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் இன்னும் வரவில்லை. அதுவரை இது போன்ற கதை திருட்டு குற்றசாட்டு தொடர்கதையாக இருக்கும்” என்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி : பாஜகவை தாக்கிய ஸ்டாலின்

வாக்காளர் பட்டியலை திருத்த இன்னும் நேரம் இருக்கிறது: தலைமை தேர்தல் அதிகாரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share