“அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை” – மீண்டும் சர்ச்சையில் ஆளுநர்!

Published On:

| By Kalai

Governor controversy again

சிலப்பதிகாரத்திலேயே தமிழ்நாடு என்று இருக்கும்போது அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இல்லை அதனால்தான் தமிழகம் என்று குறிப்பிட்டேன் என்று ஆளுநர் கூறியிருப்பது மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை.

எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பெயர் சர்ச்சைக் குறித்து இன்று(ஜனவரி 18) விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தக்காலத்தில் தமிழ்நாடு என்பது இல்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆளுநர் ஒன்றும் வரலாற்று ஆய்வாளர் இல்லை.

தமிழ்நாடு என்பது பண்டைய காலத்திலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளது என்று கூறி பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

இளங்கோவடிகள் இயற்றிய தொன்மையான காப்பியமான சிலப்பதிகாரத்தில்,

இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்லை; என்றும்

‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தவர்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தனித்தனியே சோழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்றதைக் கூறும்போது சேக்கிழார் பெருமான், தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்’ (நாவுக்கரசர் புராணம் – பாடல் எண்.289) என்றும்,

வாகீசர் மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்’ (பாடல் எண்- 400) என்றும் கூறியுள்ளதால், சோழர், பல்லவர் ஆட்சிக்காலங்களிலேயே தமிழ்நாடு என்று அழைக்கும் மரபு இருந்தது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கலை.ரா

பாஜக மீட்டிங்: தென் மாநிலங்களுக்கு மோடி போட்ட ஸ்கெட்ச்!

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உடனே எடுக்கப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share