முதலமைச்சர் ஸ்டாலினும் இந்தியா கூட்டணியை விட்டு தனியாக நிற்கும் சூழல் வரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். no alliance with edappadi palanisami
விழுப்புரம், கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட அமமுக சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திண்டிவனத்தில் இன்று (ஜனவரி 27) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,
“வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு நானே அறிவிப்பேன்.
எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. ஆட்சி பொறுப்பில் முதலமைச்சராக அமர்த்தியவருக்கு துரோகம்.
அந்த ஆட்சிக்கு பிரச்சனை வந்தபோது அதனை காப்பாற்றிக் கொடுத்தவர்களுக்கு துரோகம். நான்கு ஆண்டுகளாக இந்த ஆட்சி தொடர்வதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம்.
உடன் இருப்பவர்களுக்கும் துரோகம், தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம். இவ்வாறு துரோகம் செய்துக் கொண்டிருக்கின்ற பழனிசாமியை இனிமேல் யாருமே நம்ப மாட்டார்கள். அது தான் உண்மை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்கிறார்கள். மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு,
“ஸ்டாலினும் காங்கிரஸை விட்டு தனியாக போட்டியிடும் சூழல் வரும். திமுக ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி. விடியல் என்பது அவர்களது குடும்பத்திற்கு மட்டும்தானே தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை.
தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாட்டு மக்கள் திமுக ஆட்சி மீது கோபமாக இருக்கிறார்கள். இதற்கான முடிவு வருகின்ற தேர்தல்களில் எதிரொலிக்கும்” என்றார்.
தொடர்ந்து, அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு,
“எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. ஸ்டாலினுக்கு டெல்லியை பார்த்து பயம். ஒரு பக்கம் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சேலம் மாநாட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அதில் இருப்பவர்கள் எல்லாம் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார்கள். கடைசியில் ஸ்டாலினும் மத்தியில் ஆள்பவர்களுக்கு பயந்து கொண்டு காங்கிரசையே கை கழுவிவிட்டு தனியாக நிற்கப்போகிறார். அதுதான் நடக்க போகிறது.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும்.
ஆனால் ஒரு சில துரோகம் செய்பவர்கள், சுயநலம் உள்ளவர்கள், பணத்திமிரு பிடித்தவர்கள் அதில் வரமாட்டார்கள்.
அதனால் இப்போது இதற்கெல்லாம் சாத்தியம் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பவதாரிணியின் நவராத்திரி பாடல்: கலங்கும் வசந்தபாலன்
“டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி”: அரவிந்த் கெஜ்ரிவால்
no alliance with edappadi palanisami