தென்பெண்ணையாறு நீர் பங்கீடு வழக்கு: மத்திய அரசுக்கு அவகாசம்!

Published On:

| By Prakash

தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 3மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் பாயும் காவிரிஆற்றின் கிளைநதியாக தென்பெண்ணையாறு உள்ளது. இதன் கிளைநதியாக உள்ள மார்கண்டேய நதியின் குறுக்கே யர்கோல் என்ற இடத்தில் கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்ட முயன்று வருகிறது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை கட்ட அனுமதி வழங்கியது.

இதனால், தென்பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது.

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு காலதாமதம் செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு தொடர்ந்தது.

அதில், ‘தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் பிரச்னையை தீர்க்க, நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிட வேண்டும். அணை கட்டுவதற்கும் தடைவிதிக்க வேண்டும்,’ என கோரப்பட்டது.

இந்த நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாததால், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இதற்கான தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பாயம் அமைப்பது குறித்து 4வாரங்களுக்குள் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று(டிசம்பர் 14) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்குவந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில், ‘தென்பெண்ணை ஆற்று நதிநீர் பங்கீடு தொடர்பான முடிவுகளுக்கு ஒப்புதல் பெறும் வகையில் 4அமைச்சகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பாயம் தொடர்பான இறுதிமுடிவுகளை அளிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு 3மாதம் அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்து, வழக்கு விசாரணையை அடுத்த மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஜெ.பிரகாஷ்

குஜராத் அமைச்சரவை: கிரிமினல் வழக்கில் 4 அமைச்சர்கள்!

ஈஷாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்: ரத்து செய்த உயர்நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share