பொது இடங்களில் கட்சிகளின் கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்… திமுகவின் கொடிக் கம்ப பீடத்தை திமுக நிர்வாகிகளே இடித்து சிதைத்திருக்கின்றனர்.
இது அறிவாலயம் வரைக்கும் சென்று விசாரணை தொடங்கியுள்ளது.
இது எங்கே? thenkasi dmk party clash arivalayam
திமுகவின் தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை பாவூர் சத்திரம் காவல்நிலையத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி ஒரு புகார் அளித்தார்.
அதில்,

“தென்காசி தெற்கு மாவட்டத்தில் தென்காசி திருநெல்வேலி மெயின் ரோட்டில் KTC நகரில் 20 செண்டு இடம் அமைந்துள்ளது. 2022 இல் அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த சிவபத்மநாதன் ஒன்றிய கழக அலுவலகம் கட்டுவதற்காக இந்த இடத்தை தலைமைக் கழகத்துக்கு எழுதிக் கொடுத்தார்.
இந்த இடத்தில் 100 அடி கொடிக்கம்பம் கழக பவள விழாவை முன்னிட்டு ஏற்றுவதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த நிலையில், மாசெ பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஜெயபால் நியமிக்கப்பட்டார். அதனால் கொடிக்கம்பம் ஏற்பாடு செய்ய காலதாமதம் ஆனது.
இந்நிலையில், கலைஞரின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இங்கு 101 அடி கொடிக்கம்பத்தை முதல்வர் அல்லது துணை முதல்வரை அழைத்து திறந்து வைக்க சிவபத்மநாதன் ஏற்பாடு செய்து வந்தார். thenkasi dmk party clash arivalayam
இந்த நிலையில், மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் ஜெயபாலன் தூண்டுதலின் பெயரில் அவரின் உதவியாளராக இருக்கும் தென்காசி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே.கே.ரமேஷ் மற்றும் மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன் மற்றும் யோவான், சந்தரபாண்டியபுரம் மாரியப்பன் கடையம் சேர்மச் செல்வன் ஆகியோர்கள் முன்னிலையில் 29-ஆம் தேதி காலை ராட்சச இயந்திரம் கொண்டு 20 அடி பள்ளம் தோண்டி அமைக்கப்பட்ட 100 அடி கொடிக்கம்பத்தின் பீடத்தை உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு சிதைத்து விட்டார்கள்.

முழுக்க முழுக்க இதற்கு காழ்ப்புணர்ச்சியும் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மீது உள்ள வெறுப்பும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது” என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற புகார் அறிவாலயத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது
இது சம்பந்தமான போட்டோக்கள், வீடியோக்களோடு புகார்கள் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலைக்கு அனுப்பப்பட்டிருகிறது. இது தொடர்பாக அன்பகம் கலை விசாரணை நடத்தி வருகிறார் என்கிறார்கள் தென்காசி திமுக வட்டாரத்தில்.
இந்நிலையில், தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் ஜெயபாலன் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘உள்ள அழுகுறேன்… வெளிய சிரிக்கிறேன்… நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்’ என்ற முதல் மரியாதை பாடலை தனது கார் பயணத்தின்போது ஒலிக்கவிட்டு அதை லைவ் செய்திருக்கிறார்.