~தீரனுக்கு புதுப் பதவி: அன்புமணிக்கு பின்னடைவா?

Published On:

| By Balaji

பாமகவின் இளைஞரணித் தலைவராக மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி பதவி வகிக்கும் நிலையில், அக்கட்சியின் புதிய அமைப்பாக அரசியல் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை இன்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “ பாமகவின் முன்னாள் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் அ.வேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இக்குழுவின் தலைவராக தீரன் செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் பாமகவை வலுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். காடுவெட்டி குரு மறைந்து ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், நிரப்பப்படாமல் இருந்த வன்னியர் சங்கத் தலைவர் பதவிக்கு பு.தா. அருள்மொழியை நவம்பர் 2 ஆம் தேதி நியமித்தார்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக பாமகவில் அரசியல் ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தி அதன் தலைவராக பாமகவின் முதல் தலைவராக செயல்பட்ட, தனது உற்ற நண்பரான பேராசிரியர் தீரனை அதன் தலைவராக நியமித்திருக்கிறார் ராமதாஸ்.

“பாமகவின் முதல் தலைவரான தீரன் டாக்டரின் செயல்பாடு பிடிக்காமல் பாமகவில் இருந்து விலகினார். அதன் பின் அதிமுகவில் சேர்ந்து செய்தித் தொடர்பாளராக இருந்தார். ஊடக விவாதத்தில் தெரிவித்த ஒரு கருத்துக்காக அதிமுகவிலிருந்து 2018 ஜனவரியில் நீக்கப்பட்டார். அதன்பிறகு அரசியல் நடவடிக்கைகளில் பங்கெடுக்காமல் அமைதியாக இருந்துவந்த தீரனை தனது 80ஆம் ஆண்டு பிறந்தநாள் முத்துவிழாவுக்காக டாக்டரே போன் போட்டு அழைத்தார். அதன் பின் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

தனது முத்துவிழாவில் தீரனைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய ராமதாஸ், ‘தீரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறார். அவரிடம் நான் கூறினேன். காலம் நம்மை பிரித்து விட்டது என்று. சில சூழ்ச்சியாளர்களும் இதன் பின்னணியில் இருந்தனர். இங்கு பேசும்போது கூட அவர் உங்கள் கட்சி என்று கூறித் தான் பேசினார். இனி அவர் நமது கட்சி. நம்முடன் தான் அவர் இருப்பார்’ என்று பாமகவில் இணையஅழைப்பு விடுத்தார். அதன் பிறகு தீரன் கட்சியில் இணைந்தார்.

தீரன் கட்சியில் இணைந்து சுமார் ஆறு மாதங்கள் ஆனபோதும் அவரை பாமக சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் வேலுவும் அதிருப்தியில்தான் இருந்தார். இவர்களின் அதிருப்தியை போக்கத்தான் இப்போது அரசியல் ஆலோசனைக் குழு என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே பாமகவின் முக்கிய அரசியல் முடிவுகளை ராமதாஸும், அன்புமணியும் சேர்ந்துதான் எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு இடையிலும் சில நேரம் கருத்து வேறுபாடு வரும். அப்போது கூட அன்புமணியின் கருத்துக்கு மதிப்பளித்து அவர் எடுக்கும் முடிவை ராமதாஸ் ஏற்றுக் கொள்வார். இப்படிப்பட்ட நிலையில் தீரன் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் வேலை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இதன் மூலம் அன்புமணியின் கட்சி செல்வாக்கோ, முடிவெடுக்கும் அதிகாரமோ குறையுமா என்று பேச்சு எழ வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் பாமக நிர்வாகிகள்.

டாக்டர் ராமதாஸின் எண்ண ஓட்டம் அறிந்த சில பாமக உயர் மட்டப் பிரமுகர்களிடம் பேசியபோது, ‘உள்ளதைச் சொல்லணும்னா. அன்புமணி சொக்கத் தங்கம். சொக்கத் தங்கத்தோட கொஞ்சம் செம்பு கலந்தாத் தான் மதிப்பு. அந்த செம்புதான் இந்த ஆலோசனைக் குழு” என்று உதாரணம் சொல்கிறார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share