எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடு துறை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்வது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் வடமேற்கு கோவிலம் கடற்கரை பகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த ஒன்பது மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் இரண்டு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்து காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஒன்பது மீனவர்களையும் படகையும் யாழ்ப்பாணம் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். வியாழன் அன்று இரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 மயிலாடுதுறை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக தமிழக மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது
