நாட்டின் 77வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது தேசியக் கொடிக்கு எம்ஐ 1வி ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் (Ursula von der Leyen), ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா (António Costa) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கடமைபாதைக்கு வருகை தந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்றார்.
குடியரசு தின கொண்டாட்ட விழா நிகழ்வின் போது இந்திய ராணுவத்தின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் அர்ஜுன் டாங்கி, ஆப்ரேஷன் சிந்தூர் போது பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், சூர்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சர் அமைப்பு, நாக் ஏவுகணை அமைப்பு, நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
