சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழா சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு!
அவர், “2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின் அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடி இருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இப்படி ஒரு விழாவை அரசே முன்னின்று நடத்தாது என்று சொல்லத்தக்க வகையில், மாபெரும் பண்பாட்டுப் பெருவிழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நமக்கான இடத்தை நிலைநிறுத்துவதுதான் நம்முடைய நோக்கம்!
அமைச்சருக்கு பாராட்டு!
வரலாறும், பண்பாடும், தொல்லியலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கும் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரனுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இரண்டு பேரும் தொல்லியல் ஆர்வலர்கள். இப்போது கேட்டாலும், இந்த மேடையில் மணிக்கணக்கில் சிந்துவெளியைப் பற்றி பேசக் கூடியவர்கள். இவர்கள் இந்தத் துறைக்கு கிடைத்திருப்பது இந்தத் துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை கிடைத்திருக்கிறது.
ஆரியமும் சமஸ்கிருதமும்தான் மூலம் என்பது கற்பனை!
சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது.
‘தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ்’ என்ற இதழில் இந்தியத் தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் அதை அறிவித்தார். இது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது.
ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனையை வரலாறு என்று அதற்கு முன்னர் பலரும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதை மாற்றியது ஜான் மார்ஷல் அவர்களின் ஆய்வுகள்தான்.
சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது. அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது.
“என்னதான் அங்கு இல்லை!” என்று கேட்கும் அளவுக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி பெற்ற ஒரு நாகரிகம் சிந்துவெளியில் இருந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு அடையாளங்கள் காட்டுகிறது.
கீழடி – சிந்துவெளி ஒற்றுமைகள்!
சிந்து வெளியில் ‘காளைகள்’தான் இருந்தது. இது திராவிடச் சின்னம்! சிந்துவெளியில் இருந்து, இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில், ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது.
சிந்துவெளி நாகரிகம் சார்ந்த ஒரு முத்திரையில் காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அந்த காளை தூக்கி வீசுவதும் இருக்கிறது.
அப்படியே மற்றொரு பக்கம் பார்த்தோம் என்றால், குதிரை முத்திரை சிந்துவெளியில் இல்லை. வேத இலக்கியங்களில் பெருநகரங்களும் இல்லை, தாய்த்தெய்வ வழிபாடும் இல்லை.
ஆனால், இந்த இரண்டும் சிந்துவெளியிலும் இருக்கிறது. கீழடியிலும் இருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் சங்ககாலத் தமிழர்களின் மூதாதையர் இருந்த இடம்தான் சிந்துவெளி என்று நிறுவப்பட்டிருக்கிறது.
ஜான் மார்ஷலை பாராட்டிய பெரியார், அண்ணா
சிந்துவெளி பற்றி ஜான் மார்ஷல் தன்னுடைய கண்டுபிடிப்பை வெளியிட்டதும், தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய விடுதலை நாளிதழில் அதைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். பேசியும் இருக்கிறார்.
தந்தை பெரியாரை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவும் 1948-ஆம் ஆண்டிலேயே சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை வெளிக்கொணர்ந்த சர் ஜான் மார்ஷலின் சாதனைகளை பாராட்டி எழுதியிருக்கிறார்.
2010-ஆம் ஆண்டு கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழி மாநாட்டு இலச்சினையில், குமரி வள்ளுவர் சிலை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் வரியுடன் சேர்த்து சிந்துவெளி முத்திரையையும் பதிவிட்டார்.
அந்த மாநாட்டில் புகழ்பெற்ற அறிஞர்களான அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிந்துவெளி பண்பாட்டையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஒருங்கிணைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்தார்கள்.
அந்த மரபின் வழி வந்த நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில், இப்போது சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நினைவு பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்துகிறோம்.
சிந்துவெளி வரி வடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும், வடிவவியல் ஆய்வு என்ற நூலையும் இங்கு ஒரு வெளியிட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஜான் மார்ஷலின் சிலைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்தது மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் மீட்டவர் ஜான் மார்ஷல், அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமை.
சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷலுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும்.
தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அளவில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு தொல்லியல் துறையால், இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளை ஆய்வு மூலம் ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவியல் வழிப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் உறுதி செய்திருக்கிறோம்.
கீழடி அருங்காட்சியகம் போலவே பொருநையிலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது. எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு!
அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன்.
செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்பது முத்தான முதல் அறிவிப்பு.
சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு.
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி. ஆய்வாளர்கள், நாணயவியல் ஊக்கப்படுத்தும் விதமாக, கல்வெட்டியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்பது மூன்றாவது அறிவிப்பு.
இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது. அறிவியல் முறைப்படி சான்றுகள் அடிப்படையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது என்று நாம் உரக்கச் சொல்வோம்! ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்டப் பணியை நாம் தொடர்வோம்” என்று ஸ்டாலின் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நூதன போரட்டம் : ஏபிவிபி நிர்வாகிகளை மருத்துவமனையில் பணிபுரிய உத்தரவிட்ட நீதிபதி
பிறந்தநாளில் கலைஞர் நினைவிடத்தில் கனிமொழி மரியாதை!
INDvs AUS : பார்டர் கவாஸ்கர் கோப்பையுடன்… கனவையும் தொலைத்த இந்தியா