தமிழக சட்டப்பேரவை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 20ல் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 26) சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரும் 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை மாண்புமிகு ஆளுநர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 174 (1)ன் கீழ் தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் ஜனவரி திங்கள் 20ம் நாள் காலை 9.30 மணிக்கு கூட்டியுள்ளார்.
அன்றைய தினமே ஆளுநர் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையினை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 176 (1)ன் கீழ் பேரவைக்கு வாசித்து அளிப்பார் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு முதல் கூட்டத்தொடரில் பேரவை தொடங்கிய சிறிது நேரத்தில் ஆளுநர் வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் மரபுகளை மாற்றவே மாட்டோம். ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்குப்பின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
