கனியமூர் பள்ளியை அரசு எடுத்து நடத்தக் கோரி வழக்கு!

Published On:

| By Monisha

கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித் தலைவர் உயர் நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 24) மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனால் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமானதால் பள்ளியிலுள்ள பொருட்கள், வாகனங்களோடு சேர்த்து காவல்துறை வாகனத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.

இதனால் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்து வருகிறது காவல்துறை.

இந்நிலையில், பள்ளியை மறு சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளியை மறுசீரமைக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பள்ளியை மறு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மறு சீரமைப்பு பணி முடிந்தவுடன் பள்ளி வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித் தலைவர் எல்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “முதல் உயிரிழப்பு சம்பவத்தின் போதே பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஸ்ரீமதி உயிரிழந்திருக்க மாட்டார்.

சக்தி பள்ளியில் படித்த மாணவர்களை மற்ற பள்ளிகள் ஏற்க மறுக்கின்றனர்.

எனவே அந்த பள்ளியைத் தமிழக அரசே எடுத்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

மோனிஷா

டிவி, வீடியோ கேம்ஸுக்கும் குழந்தைகள் அடிமையாகமால் இருக்க வேண்டுமா? – சத்குரு

இந்தியாவில் அக்.1 முதல் 5ஜி சேவை: கட்டணங்கள் அதிகரிக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share