“திமுக ஆட்சி இதற்குதான் சாட்சி” : குற்றச்சாட்டுகளை அடுக்கிய டிடிவி தினகரன்

Published On:

| By Kavi

இருண்ட காலத்தின் நிகழ் சாட்சியாக திமுக விளங்குவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து 4ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதை முன்னிட்டு இன்று (மே 7) மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Image

3 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் “இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல திட்டங்களால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே அதற்கு சாட்சி. இது சொல்லாட்சி அல்ல… செயலாட்சி… தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு” என்று வீடியோ மூலம் கூறியிருந்தார்.

இந்நிலையில், “திமுக ஆட்சி – ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் கொலை, கொள்ளை, பட்டிதொட்டியெங்கும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே சாட்சி.” என்று விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

அவர் இன்று (மே 7) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தோடு கூடிய கடும் துயரங்களையும் பரிசாக தந்திருக்கும் திமுகவின் மக்கள் விரோதச் செயல்களில் ஒருசிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

– மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நாடு போற்றும் நல்ல திட்டங்கள் முடக்கம்.

நேர்மையற்ற, வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தால் அரசின் அனைத்து துறைகளின் மீதும் எழும் ஊழல் புகார்கள்.

நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களால் சீர்குலைந்த சட்டம் – ஒழுங்கு

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு நடைபெறும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்

தலைவர் இல்லாத டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் நிகழும் குளறுபடிகளால் அதிகரித்திருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்

பால்விலை மற்றும் மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி, குடிநீர் வரி பன்மடங்கு அதிகரிப்பு

காய்கறிகள் தொடங்கி பருப்பு வகைகள் வரையிலான அனைத்து வித அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகள்

ஆளுங்கட்சியினரின் தவறுகளையும் முறைகேடுகளையும் தட்டிக்கேட்கும் அரசு அதிகாரிகள் மீது நடைபெறும் தாக்குதல்கள்

காவிரியிலிருந்து நீரை உரிய நேரத்தில் பெற்றுத்தர முடியாத திமுக அரசால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

தங்களின் சொந்த நிலங்களை பாதுகாக்க போராடும் விவசாயிகள் மீது பாய்ச்சப்படும் குண்டர் சட்டம்

மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டால் தவித்துவரும் நோயாளிகள்

ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள்

நகர்ப்பகுதிகள் தொடங்கி கிராமப்புறங்கள் வரையில் நாள்தோறும் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கோடை காலத்தில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாடு” என திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள டிடிவி தினகரன்,

“திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் மற்றும் விவசாயக்கடன் தள்ளுபடி, தடையின்றி மும்முனை மின்சாரம், நெல் மற்றும் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம், கச்சத்தீவு மீட்பு, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல், ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், அரசு ஊழியர்களின் சமவேலைக்கு சம ஊதியம், வருடத்திற்கு பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, முதியோர் உதவித் தொகை அதிகரிப்பு, காவலர்களுகு வாரவிடுப்பு, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கணக்கீடு, அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை என எண்ணற்ற வாக்குறுதிகளில், எந்த வாக்குறுதிகளையுமே இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சாட்சியாக இருக்கும் திமுகவின் ஆட்சியில், இனி எஞ்சியிருக்கும் காலங்களிலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் என்ற அறிகுறியோ, நம்பிக்கையோ தென்படுவதாக தெரியவில்லை.

இருண்ட காலத்தின் நிகழ் சாட்சியாக விளங்கும் மக்கள் விரோத திமுக அரசிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களே தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

3ஆம் கட்ட தேர்தல்: 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவு!

சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா… விசாரணைக்கு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share