வங்கக்கடலில் நாளை மறுநாள் (மே 25) புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு, ‘ரீமால்’ என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில், இன்னும் 3 நாட்களில் வங்கக்கடலில் தீவிர புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (மே 23) தெரிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (மே 22) உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், மே 25 முதல் மே 28 வரை மிதமானது முதல் கனமழையும் பெய்யக்கூடும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை (மே 24) காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
பின்னர், வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேலும், தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் மே 25ஆம் தேதி காலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து, வடக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை மே 26ஆம் தேதி மாலைக்குள் தீவிர புயலாக கரையை கடக்கும்.
இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைப்படி ‘ரீமால்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 கோடி விவகாரம்… சிபிசிஐடிக்கு ‘அழுத்தம்’ கொடுக்கும் பாஜக
இது தவறான வழிகாட்டுதல் : தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் பதில்!