நாடு முழுவதும் இன்று 77 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் பங்கேற்ற முதல்வர் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களான பா. சுரேஷ், செ. ரமேஷ் குமார் மற்றும் தீயணைப்பு வாகன ஓட்டுநர் வீ. சங்கர் ஆகிய மூவருக்கும் வீரதீர செயலுக்கான அண்ணா விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் வீர தீர செயலுக்கான பதக்கம் கன்னியாகுமரியை சேர்ந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டனர். மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது திருப்பூரைச் சேர்ந்த கலிமுல்லாவுக்கு வழங்கப்பட்டது.
நாராயண சுவாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணிக்கு வழங்கப்பட்டது. மேலும், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர் என ஐந்து பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
மதுரை மாநகரக் காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரக் காவல் நிலையத்திற்கு இரண்டாம் பரிசும், கோயம்புத்தூர் மாநகரக் காவல் நிலையத்திற்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
