பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 3) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு!
நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்! அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக TAPSஅறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.
திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்! தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்!” என தெரிவித்துள்ளார்.
