நீண்ட தேடுதலுக்குப் பிறகு தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 40 பேர் பூண்டி மாதா பேராலயத்திற்கு வேனில் வந்தனர்.
அப்போது கும்பகோணம் அருகே கொள்ளிடத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டவர்களுக்கு அதில் இறங்கி ஆனந்த குளியல் போடவேண்டும் என்ற ஆசை எழுந்திருக்கிறது.
சுற்றுலா வந்தவர்களில் ஆண்கள் நேற்று(அக்டோபர் 3) காலை பூண்டி செங்கரையூர் பாலம் அருகில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதில் சார்லஸ், பிரவீன் ராஜ், பிரதீவ்ராஜ் ,தாவீது ,ஈஷாக், தெர்மஸ் ஆகியோர் நிலைதடுமாறி நீரில் மூழ்கினர்.

உடனடியாக திருக்காட்டுப்பள்ளி காவல்நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
6 பேர் நீரில் மூழ்கிய செய்தி கேட்டு சுற்றுவட்டார கிராம மக்களும் ஆற்றங்கரையில் குவிந்தனர்.
தீயணைப்பு வீரர்கள், உயிரற்ற நிலையில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய இருவரையும் முதலில் மீட்டனர்.
மற்ற 4 பேரையும் தேடி வந்த நிலையில், 6 மணி நேரத்திற்கு பிறகு மதியம் தாவீது உடல் மீட்கப்பட்டது.

மீதமுள்ள 3 பேரின் உடலை ரப்பர் படகில் சென்று தீயணைப்பு வீரர்கள் தேடினர். இதில் மாலை 3.30 மணியளவில் பிரவின்ராஜ் உடல் 4வதாக மீட்கப்பட்டது. தெர்மஸ், ஈசாக் உடல்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை (அக்டோபர் 4) தெர்மஸ் என்பவரது உடல் மீட்கப்பட்டது. இதற்கிடையே மீட்புப்பணிக்காக ராணிப்பேட்டையிலிருந்து பேரிடர் மீட்புக் குழுவும் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வந்தது.

அதற்குள் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்களே ஈசாக் உடலையும் மீட்டனர். 6 பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கோயில் சுற்றுலா வந்து 6 பேர் உயிரிழந்ததைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உறைய வைப்பதாக இருந்தது. உயிரிழந்த 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா